ஒரு நாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம்
வந்தார். முல்லா அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து
இரவலாகத் தாருங்கள்.
இரண்டு நாட்கள் கழிந்ததும் திருப்பி தந்துவிடுகிறேன் என்றார்
நண்பர்.
அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை
இரவல் வாங்கிச் சென்றதுண்டு. அப்பொழுதெல்லாம் சொன்ன நாட்களில் கழுதையைத் தரவில்லை.
தவிரவும் கழுதைக்கு சரியான உணவளிக்காமலும் விட்டிருந்தார்.
அதனால் அவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது
என்று முல்லா தீர்மானித்து விட்டார். நண்பரே! என் கழுதை இப்பொழுது வீட்டில் இல்லை.
அதை வேறு ஒருவர் இரவலாக்க் கொண்டு சென்றிருக்கிறார் என்று முல்லா கூறினார்.
நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட
சமயம் முல்லாவின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் கழுதை கத்தும் குரல் கேட்டது.
முல்லா அவர்களே! கழுதை வீட்டில் தான் இருக்கிறது
போலிருக்கிறதே! யாரோ இரவலாகக் கொண்டு சென்றதாகக் கூறினீர்களே என்று நண்பர்
வியப்புடன் கேட்டார். முல்லாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
நான் சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு
கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீர். என் மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்குக்
கழுதையை இரவல் தரக்கூடாது என்பதற்காகத் தான் வேறு ஒருவர் அதைக் கொண்டு சென்றார்
எனச் சொன்னேன் என்றார்.
நண்பர் அவமானமடைந்து அந்த இடத்தை விட்டு
கிளம்பினார்.
No comments:
Post a Comment